நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது ‘ராயன்’ திரைப்படம். இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
குண்டர் கும்பல்கள் சார்ந்த கதைகளில் தனி ஆர்வம் காட்டுவது தனுஷின் வழக்கம். ‘ராயன்’ திரைப்படமும் அவ்வாறான கதைப் பின்னணியுடன்தான் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கதைப்படி, தனுஷ் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ‘காத்தவராயன்’ எனக் கூறப்படுகிறது. குண்டர் கும்பல் சார்ந்த கதை என்றாலும் இதில் அண்ணன், தங்கைக்கான உணர்வுப்பூர்வமான அம்சங்களும் கலந்திருக்குமாம்.
தனுஷ் நடித்துள்ள ஐம்பதாவது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது ‘ராயன்’. ‘கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள படம் இது.
‘கேப்டன் மில்லர்’ குறித்து பெரிதாக பேசப்பட்ட போதிலும் அப்படம் கலவையான விமர்சனங்களேயே பெற்றது. பட வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை எனக் கூறப்பட்டது.
‘ராயன்’ படத்தைத் தயாரிப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பதால் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்ற உத்தரவாதம் உள்ளதாக தனுஷ் ரசிகர்கள் கூறுகின்றனர்.
பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா பால முரளி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த சூழலில் பின்னணி இசைக்கோர்ப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.
படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை. தனுஷ் இயக்கியுள்ள இப்படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மிக விரைவில் இப்படத்தின் முதல்பாடல் வெளியிடப்படும் என்றும் அதன் பிறகே குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
’ராயன்’ படத்தில் பிரபுதேவாவும் இணைந்துள்ளார். அவர் நடனம் அமைத்த பாடலில் 500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் பங்கேற்றனராம். இதற்கு முன்பு ‘மாரி’ படத்தில் தனுஷ், சாய்பல்லவி இணைந்து நடித்த ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.
அதன் பின்னர் அவர் தனுஷுடன் இப்போதுதான் கைகோத்துள்ளார். இந்த முதல் பாடலை தனுஷ்தான் பாடியுள்ளாராம். அநேகமாக மே முதல் வாரம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சில காட்சிகளைச் சுருக்கும் பணியில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறாராம். அனேகமாக ஜூலை மாதம் ‘ராயன்’ படம் வெளியீடு காணக்கூடும்.
ஜூலையில் அவரது பிறந்தநாளும் வருவதால் ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் விருந்தாக இப்படம் அமையும் என தனுஷ் கூறிவருகிறாராம்.
இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளதாகத் தகவல். 10 நாள்களுக்கு அங்கு நடைபெறும் முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ்.
‘குபேரா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பை படப்பிடிப்பின்போது இருவரும் சம்பந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனராம்.
இந்தப் படமும் குண்டர் கும்பலை மையப்படுத்தி உருவாகி வருவதாகத் தகவல். மும்பை மாநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாராவியில் சில காட்சிகளை எடுத்துள்ளனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் மேலும் ஒரு சுவரொட்டியை வெளியிட உள்ளனர்.
இதற்கிடையே, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது வெளியில் பேசுவதில்லை என தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.
இனி செய்தியாளர்கள் சந்திப்பு, தனிப்பேட்டி ஆகியவற்றின்போது குடும்பம் தொடர்பான கேள்விகளை தவிர்க்குமாறு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தரப்பிடம் தெரிவிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
நடை, உடை, பாவனை என அனைத்திலும் இளையராஜாவின் சாயல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது பழைய புகைப்படங்கள் தொடங்கி அண்மைய காணொளிகள் வரை அனைத்தையும் பார்த்து வருகிறார் தனுஷ்.
தனது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் தொடர்ந்து படங்களை இயக்குவது எனவும் தனுஷ் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.