பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ‘கல்கி 2898 AD’ ஜூன் மாதம் 27ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான படம் ‘கல்கி 2898 AD’. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தில் நாயகனாக நடித்த இவர், அதன் பிறகு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இந்தப் படம், பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ், ராணா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள சூழலில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ‘கல்கி’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமையை வாங்கியுள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் நிறுவனம் 150 கோடி ரூபாய்க்கு ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வாங்கிய சம்பளத்தில் சுமார் 25 படங்கள் எடுத்துவிடலாம் என்கின்றனர் வலைத்தளவாசிகள்.
நடிகர் பிரபாஸிற்கு சுமார் 150 கோடி ரூபாயும் உலகநாயகன் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் மூவருக்கும் தலா ரூ.20 கோடி, திஷா பதானிக்கு ரூ.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே 250 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.