நான் வாய்ப்புகளைத் தேடி அலைந்ததில்லை: வரலட்சுமி

நான் வாய்ப்புகளைத் தேடி அலைந்ததில்லை: வரலட்சுமி

3 mins read
3ff5385c-a1f4-4cb6-a07b-ae3c1f0ec15c
வரலட்சுமி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு வரலட்சுமியிடம் உற்சாகம் அதிகரித்துள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் மனநிறைவு அளிப்பதாகச் சொல்கிறார்.

வரலட்சுமி நடிப்பில் அடுத்தடுத்து ஆறு படங்கள் வெளியீடு காண வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றுள் ‘சபரி’ படம் முதல் இடத்தில் உள்ளது.

“ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை விவரிக்கும் அருமையான படைப்பாக இது உருவாகியுள்ளது,” என்று பாராட்டுச் சான்றிதழ் தருகிறார் வரலட்சுமி.

‘மே 3 ஆம் தேதி ‘சபரி’ படம் வெளியாகிறது. இதில் தனித்து வாழும் தாயாக வரலட்சுமி பாந்தமாக நடித்துள்ளாராம். தாம் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் முக்கியமானவை என்கிறார்.

“என்னால் இயன்றவரை சிறப்பாக நடித்திருக்கிறேன். எப்போதுமே ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்வது என் வழக்கம்.

“ஒரு கதையில் எனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக சித்திரிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வேன். ஒவ்வொரு காட்சிக்கும் ஒருவிதத் தனித்தன்மை இருக்கும். எனவே அதையும் புரிந்து கொண்டு நடிக்கும்போதுதான் நமக்கான பாராட்டுகள் கிட்டும்.’

“மனோதத்துவ களத்தில் உருவாகும் திகில் படம் என ‘சபரி’யைக் குறிப்பிடலாம்,” என்கிறார் வரலட்சுமி.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம். மேலும், துரத்தல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்.

சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதாகவும் இத்தகைய மெனக்கெடல்கள் தமக்கு மிகவும் பிடித்தமானவை என்றும் சொல்கிறார் வரலட்சுமி.

“என்னுடைய வேலையை சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் எப்போதுமே கவனத்துடன் இருப்பேன். அந்த வகையில் இப்படத்துக்காக எனது உடல் எடையை குறைக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

“அதன் பிறகு படம்முடியும் வரை எனது எடைக்குறைப்பு முயற்சி தடைபடவில்லை. முன்பெல்லாம் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது எனது கால் முட்டுகள் வலிக்கும். என்னைப் பொறுத்த வரை எந்த ஒரு உடல்வாகு இருந்தாலும் ஒருவரால் எப்போதுமே உடல் நலத்தை சீராகப் பேணிக் காக்க இயலாது.

“நம் கண்முன்னே எதிர்படும் சில படிக்கட்டுகளை ஏறி முடித்த பின்னர் மூச்சு இரைக்கவில்லை எனில் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் எத்தகைய தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்,” என்கிறார் வரலட்சுமி.

‘சபரி’ படத்தில் தேவையற்ற சண்டைக்காட்சிகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் இத்தகைய காட்சிகள் வலிய திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது என்கிறார்.

“பொதுவாக மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைந்தால் அவற்றை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வேன். அப்படித்தான் சில படங்களில் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

“இத்தகைய வாய்ப்புகளை நான் என்றுமே தேடியதில்லை. ஆனால் அவை என்னைத் தேடி வந்தன. சவால் மிகுந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என என் ரசிகர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்களை வழிநடத்தும் தலைவியைப்போல் நான் திரையில் தோன்றுவதை அவர்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.

“அண்மையில் நான் தெரிந்து கொண்ட தகவல் என்னை நெகிழவும் மகிழவும் வைத்தது. சவாலான, திமிரான ஆண்களை கட்டுப்படுத்தும் கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பிறகு என்னைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட பாராட்டுகள் நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல உதவும்,” என்கிறார் வரலட்சுமி.

குறிப்புச் சொற்கள்
நடிகை