‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமக்கு கிடைத்த அனுபவங்கள் தனது திரைப்பயணத்திற்கு உதவிகரமாக அமையும் என்கிறார் இளம் நாயகி அதிதி போஹன்கர்.
அண்மைய பேட்டியில் ‘ஸ்டார்’ படம் குறித்தும் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இவர் ஏற்கெனவே ‘ஆஸ்ரம்’, ‘ஸீ’ (She) உள்ளிட்ட இணையத் தொடர்களில் நடித்துள்ளாராம்.
இந்நிலையில் ‘ஸ்டார்’ படத்தில், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்க வேண்டும் என்பதற்காக சுமார் ஒரு மாத காலம் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
“படப்பிடிப்புத் தொடங்கும் முன்பு தனது கதாபாத்திரம் வாழும், சென்று வரும் உலகம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள விரும்பினேன். அப்போதுதான் எனது கதாபாத்திரத்திற்குள் நுழைய முடியும் என்று தோன்றியது.
“கதைப்படி எனது பெயர் சுரபி. அது தொடர்பான மக்களுடன் கலந்து பேசிய போதுதான் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறோம் என்பது தெரிந்தது.
“மேலும் மிகப்பெரிய மால்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு கண்ணில் தென்பட்ட இளம்பெண்களுடன் பேசியபோது அவர்களின் உடல்மொழி, முகபாவனைகள் ஆகியவற்றை அருகில் இருந்து கவனிக்க முடிந்தது. பெண்கள் எது குறித்தெல்லாம் உரையாடுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்,” என்கிறார் அதிதி.
ஒரு கட்டத்தில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாம் நேசிக்கத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்ட அவர், பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்தபின் மாறுபட்ட சிகை அலங்காரம், உடைகளை உடுத்தும் பாங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தியாகச் சொல்கிறார்.
தமது முயற்சிகள் அனைத்துக்கும் ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர் இளன் முழுமையாக உணர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்தார்.
தினந்தோறும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு தென்படும் மக்களின் உடல்மொழிகள், செயல்பாடுகளைக் கவனிக்கச் சொன்னாராம்.
“ஒரு குறிப்பிட்ட காட்சியில் நான் இடைவிடாமல் வசனம் பேச வேண்டும். அதற்கான 28 வரிகளை ஒரே ‘டேக்’கில் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியதும் பதற்றம் ஏற்பட்டது.
“அந்த 28 வரிகளையும் நாள்தோறும் மனப்பாடம் செய்து வந்தேன். எனது குறுகியகால திரைப்பயணத்தில் எதிர்கொண்ட முதல் சவால் இது எனலாம். 28 வரிகளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது எளிதாக இருக்கலாம்.
“ஆனால் வசனங்களைப் பேசியபடி பல்வேறு முகபாவங்களை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவது சிரமம். ஏறக்குறைய 12 நாள்கள் குறிப்பிட்ட காட்சிக் காகத் தயாராகி வந்தேன். எனினும் இறுதியில் அக்காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஆதிதி.
தமிழில் பேச பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் கூடுமானவரை தமக்குத் தெரிந்த வார்த்தைகளைப் பயன்படுத்த படக்குழுவினருடன் தமிழில் உரையாடியதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழாசிரியரை வரவழைத்து தமிழ் மொழியைக் கற்று வருகிறாராம்.
“மொழி தெரியும்போது எனது பணியை மேலும் அதிகமாக நேசிக்க முடிகிறது. அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போது ரசிகர்களால் நான் பேசும் தமிழைப் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.
“இயக்குநர் இளனைப் பொறுத்தவரை நிபுணத்துவம் வாய்ந்த இயக்குநர் எனலாம். யார் வேண்டுமானாலும் எந்தச் சமயத்திலும் அவரை அணுக முடியும்.
“படப்பிடிப்பின்போது சில காட்சிகளில் நான் நடித்த விதம் எனக்கு மனநிறைவைத் தரவில்லை. எனினும் அக்காட்சிகளை மீண்டும் படமாக்கலாம் என்று நான் கேட்டபோது இயக்குநர் மறுத்துவிட்டார். இதனால் காட்சிகள் எப்படி இருக்குமோ என்று ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் இறுதியில் இயக்குநர் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
“ஏனெனில் திரையில் எனது நடிப்பு மிக நேர்த்தியாக இருந்தது. எனக்கு நெருக்கமான பலரும் அதனைத் தெரிவித்தனர்,” என்கிறார் அதிதி.