‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ ஆகிய படங்களில் தாம் நடிக்கப்போவது உறுதி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இரு படங்களையும் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளதாக அவர் கூறினார்.
அண்மையில் தனது ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சூர்யா. அப்போது ரசிகர் ஒருவர் ‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ படம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சூர்யா, “இரு படங்களுக்கானப் பணிகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறோமே தவிர, அவற்றைக் கைவிடவில்லை. இரு படங்களும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதுபோல் பெரிய படைப்புகளாக உருவாகும். இதில் சந்தேகமே இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாடிவாசல் படத்தை வெற்றிமாறனும் புறநானூறு படத்தை சுதா கொங்கராவும் இயக்க உள்ளனர். சில பிரச்சினைகள் காரணமாக இப்படங்கள் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இரு படங்களிலும் தாம் நடிப்பதை உறுதி செய்துள்ளார் சூர்யா. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.