அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படம் பல்வேறு காரணங்களால் தாமதம் அடைந்து வருகிறது.
முதலில் இயக்குநர் மகிழ் திருமேனி தம்மிடம் சொன்ன கதையில் பல மாற்றங்களைச் செய்யுமாறு கூறி இருந்தார் அஜித். அவற்றைச் செய்து முடிக்கவே ஆறு மாதங்கள் ஆகின.
ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. எனினும் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல முடியாத வகையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வீண் தாமதங்கள் காரணமாக படத்தின் தயாரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதாம். இனி ‘விடாமுயற்சி’ படத்தை ரூ.300 கோடிக்கு விற்றால்தான் அதன் தயாரிப்பாளரான லைக்காவுக்கு லாபம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து தயாரிப்புத் தரப்பு அஜித்தின் ஊதியத்தைக் குறி வைத்திருக்கிறது. படத்துக்காக அவருக்குப் பேசப்பட்ட ஊதியத்தில் 20 விழுக்காட்டைக் குறைக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் கேட்டுள்ளது என்றும் இதற்கு அஜித் தரப்பு பதில் ஏதும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அடுத்தகட்ட படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருதரப்பினரும் மௌனம் காப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

