கமல்ஹாசனின் ‘தக்ஃலைப்’ படத்தில் இருந்து சிம்பு விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்திருந்தார்.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது தயாரிப்பில் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்தார் ஐசரி கணேஷ். எனினும் தலைப்பு அறிவிக்கப்பட்டதோடு இப்படம் முடங்கிவிட்டது.
இதில் நடிக்க சிம்புவுக்கு ரூ.4.5 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டதாம்.
எனினும் சிம்பு ஒத்துழைக்காததால் ஐசரி கணேஷ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘தக்ஃலைப்’ படத்தில் சிம்பு நடிக்கக் கூடாது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பதற்கு ‘ரெட் கார்டு’ தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிம்பு மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
தன் மீதான புகார்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்வு கண்டு வந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கும் சிம்பு விரைவில் தீர்வு காண்பர் என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தனது அடுத்தடுத்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவற்றுக்கான பணிகளை சிம்பு வேகப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

