நடிகர் பிருத்விராஜ் மலையாளப் படங்களில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம் வரும் வெள்ளிக்கிழமை (மே 16) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே அப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிருத்விராஜ், “நானும் மம்முட்டியும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என பலரும் விரும்புகிறார்கள். அப்படி ஒரு கதை உள்ளது. இருவரும் அந்தக் கதையைக் கேட்டோம். இருவருக்கும் பிடித்துள்ளது. ஆனால், மம்முட்டி தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் அவருக்கு நேரமில்லை. அதனால் இந்தப் படம் உருவாக சவாலாக இருக்கும்” என்றார்.
கடந்த 2012ஆம் ஆண்டு பிருத்விராஜ், மம்முட்டியுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும், இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் படம் பிரமாண்டமாக உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டு இறுதியில் கைவிடப்பட்டது.
முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தில் மம்முட்டியுடன் இணைந்து பிருத்விராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ப்ரோ டாடி’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பிருத்விராஜ் இயக்கி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் ஈட்டியது.

