சிவா கில்லாரி தயாரிப்பில் நடிகர் விமல், கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை.’ அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரை காண உள்ளது.
அண்மையில் இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய நடிகர் கருணாஸ், “பட இயக்குநர் மைக்கேல் இந்த அளவுக்கு ஆணித்தரமாக, அழுத்தமாகப் பேசுவதற்கு அவர் தனது திறமைமீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். அந்த அளவுக்குச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார்.
“கடந்த 24 ஆண்டுகளாகத் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டு நின்றதில்லை.
“இந்தத் திரையுலகம் யாரையும் மதிக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம்.
“மைக்கேல் இந்தக் கதை இப்படித்தான் வரவேண்டும் என பிடிவாதமாக இருந்தார். அதன்படி என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். நான் ஒரு நாயகனுடன் இணைந்து நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
“இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, இந்தப்படத்தில் நடித்தால் நாம் இறந்த பின்னரும் பெயர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்கும் என நினைத்தேன்.
“ஆனால், ஒரு கட்டத்தில் கிடைத்த வாய்ப்பும் கை நழுவிப்போனது. நாம் நடிக்கவேண்டும் என்று எழுதியிருந்தால் அது நடக்கும் என நினைத்தேன். அதுபோல்தான் இப்போது நடந்துள்ளது. எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக என் பெயர் சொல்லும் படமாக இப்படம் இருக்கும்,” என்று கருணாஸ் தெரிவித்தார்.