திருமணத்திற்குப் பிறகு தனது திருமண வாழ்க்கை எந்த விதத்தில் சென்று கொண்டுள்ளது என்பது குறித்து பேட்டி ஒன்றில் காஜல் அகர்வால் பேசியிருக்கிறார்.
“திருமணத்திற்குப் பிறகு எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். எனது திரையுலக வாழ்க்கையில் அவர்கள் எவரும் தலையிடுவது இல்லை. இதனால் எனது குடும்ப வாழ்க்கையும் திரையுலக வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டுள்ளது,” என்று கூறியிருக்கிறார்.
தனது குடும்ப வாழ்க்கையைக் கவனித்துக்கொண்டு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தனது திருமணத்துக்கு முன்பும் பின்பும் திரைப்பட வாழ்க்கையில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை என்றும் ஒரே மாதிரியாகத் தான் வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.
“மனைவியாகவும் தாயாகவும் இருந்து வருகிறேன். எனினும் முன்புபோலவே இப்போதும் எனது சக்தியும் செயல்பாடுகளும் இருந்து வருகின்றன,” என்று கூறியுள்ளார்.
காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு, நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் காஜல் நடித்து வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘சத்யபாமா’ என்ற தெலுங்குப் படத்திலும் காஜல் நடித்திருக்கிறார். இப்படம் மே மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

