திருமணத்துக்குப் பிறகு தனது உடல் எடை வேகமாக அதிகரித்துவிட்டதாகவும் அதனால் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
சில சம்பவங்கள் காரணமாக தனது மன அழுத்தம் அதிகரித்துவிட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்குள்ள உடல் கோளாறுகள் குறித்து மற்றவர்களுக்குத் தெரியாது. ஒருசிலரிடம் என் உடல்நிலை குறித்த விவரங்களை தெரிவித்தபோது ‘இது சாதாரண விஷயம்தானே’ என்று அலட்சியமாகக் குறிப்பிட்டனர். இதுவும் என் மன அழுத்தத்தை அதிகரித்தது.
“மேலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னுடைய புகைப்படத்தை வழக்கத்தைவிட பெரிதாக்கி அதன்மீது மோசமாக ஏதோ குறிப்பிட்டு இருந்தனர்.
இதைக் கண்டு வருத்தமும் கோபமும் அதிகரித்தது என்றாலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்பட்டது. அதன் பலனாக என் உடல் எடை 25 கிலோ அளவுக்கு குறைந்தது. இணைய வசதி இருப்பதால் ஒருசிலர் என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டனர்.
“இன்ஸ்டகிராமில் ஒருவர் ஆபாசமாக என்னைப் பற்றி பதிவு செய்ததால் காவல் துறையில் புகார் அளித்தேன்,” என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நமீதா.


