‘தி ஒன்’ என்ற பெயரில் உருவாகும் புதுப்படத்தை இயக்குகிறார் சங்ககிரி ராஜ்குமார்.
உலக சாதனை புரிவதில் தமக்கு மிகுந்த நாட்டம் உண்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இதன் மூலம் உலக அளவில் அதிக கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம் ராஜ்குமார்.
“என்னுடைய இயக்கத்தில் வெளியான ‘வெங்காயம்’ திரைப்படத்தில் தெருக்கூத்து கலையைப் பற்றியும் கலைஞர்கள் குறித்தும் அழுத்தமாக விவரித்து இருந்தேன்.
“இதற்காக அமெரிக்கா சென்று அங்குள்ள 300 கலைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு மாதங்கள் பயிற்சி அளித்து, அதன்பிறகே சிக்காகோ நகரில் 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினோம்.
“மேலும், இந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கண்காணித்து பல்வேறு நாடுகளில் ஒரே தருணத்தில் அதிகமான கலைஞர்கள் பங்கேற்று மேடையில் தெருக்கூத்து நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
“இதற்காக கின்னஸ் சாதனைக்கான சான்றிதழும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது,” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
இந்தச் சாதனையை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்கப் போகிறாராம். தெருக்கூத்து கலையை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

