’மகாராஜா’ படத்தின் வெற்றி அப்படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் சஞ்சனா.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மகாராஜா’ படப்பிடிப்பு தொடங்கியது முதல் தன்னுடைய உண்மையான மகளாகவே கருதி விஜய் சேதுபதி அரவணைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அவருக்கு வரும் உணவை எனக்கு கொடுத்துவிடுவார். எனக்கு ஏதேனும் தேவைப்பட்டால் உடனே வந்து நிற்பார்.
“நான் அவரைத் தந்தையாக நினைத்ததுபோல், என்னை அவர் என்னை மகளாகக் கருதுகிறார் எனப் புரிந்தது.
“படப்பிடிப்பு இல்லாத சமயங்களில்கூட இருவரும் அப்பா, மகளாகத்தான் பழகினோம். அதனால்தான் இருவரும் குடும்ப உணர்வுகளுடன் தொடர்புள்ள காட்சிகளில் சிறப்பாக நடித்தோம்.
“இந்தப்படம் வெளியான பிறகு எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அதை நினைத்தால் பெருமையாக உள்ளது,” என்கிறார் சஞ்சனா.

