இதுவரை தாம் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே தமக்கு நல்ல பெயரைப் பெற்று தந்துள்ளதாகச் சொல்கிறார் நடிகை மாளவிகா சர்மா.
அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், கல்லூரி காலத்திலேயே தமக்கு விளம்பர, திரைப்படத்துறைகளின் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கல்லூரி நாள்களில் மனம் அனைத்துக்கும் ஆசைப்படும். இதை உணர்ந்திருந்ததால் என்னால் பக்குவமாகச் செயல்பட முடிந்தது.
“கல்லூரி படிப்பு முடிப்பதற்கு முன்பே விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றேன். மேலும் சில நிகழ்ச்சிகளில் மாடல் அழகியாகவும் மேடையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.
“நாம் சரியான கோணத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டால் திரைப்பட வாய்ப்புகள் தன்னால் தேடிவரும். அந்த வகையில் விளம்பரப்படங்களில் நடித்ததன் அடுத்தகட்டமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன,” என்கிறார் மாளவிகா சர்மா.
தெலுங்கில் முன்னணி நாயகன் ரவி தேஜாவுடன் இவர் இணைந்து நடித்த ‘டிக்கெட்’ என்ற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதையடுத்து, தமிழில் வாய்ப்பு தேடத் தொடங்கினாராம். அதற்கு உடனடியாக பலனும் கிடைத்ததாம்.
“ரவி தேஜாவுடன் நடித்த படத்தில் என்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன். அன்றாடம் நான் என்னவெல்லாம் செய்வேனோ அதைப் பிரதிபலிக்கும் வகையில் எனது கதாபாத்திரம் இருந்தது.
“காஃபி வித் காதல்’ என்ற தலைப்பில் உருவான அப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதன் பிறகு பிற மொழிகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் தமிழில் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை,” என்று சொல்லும் மாளவிகா சர்மா, ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்தியுள்ளார்.
ஒரு பக்கம் திரைப்படங்களில் கவனம் செலுத்தியபடியே, மற்றொரு பக்கம் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
தற்போது பகுதி நேர வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறாராம். செல்லப் பிராணிகள் என்றால் மாளவிகாவுக்கு மிகவும் பிடிக்குமாம்.
தன் வீட்டிலும் நாய்க் குட்டிகளை வளர்க்கிறார். மாளவிகாவுக்கு கதக், நடனம் அத்துப்படி. அதனால் தனது படங்களில் நடன காட்சிகள் இருந்தால் உற்சாகமாகி விடுகிறார்.
“ஓய்வு நேரங்களில் எனக்கு மனநிறைவு அளிக்கக்கூடிய அனைத்தையும் முயற்சி செய்வேன். அந்த வகையில் நான் இயற்கையின் தீவிர ரசிகை. பொழுதுபோகாத தருணங்களில் இயற்கை அழகு மிகுந்த இடங்களுக்கு நேரில் சென்று பொழுது போக்குவேன்.
“சமூக சேவைகளிலும் நாட்டம் உண்டு. அண்மையில்கூட அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு காலணிகள் வாங்கித்தந்து அவர்களை மகிழ்வித்தேன்,” என்று சொல்லும் மாளவிகா சர்மா, எதையும் வெளிப்படையாகப் பேசுவதுதான் தமது இயல்பு என்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நன்கு அறிந்துள்ளதாகவும் சொல்கிறார் மாளவிகா சர்மா.
சமூக ஊடகங்களில் உருப்படியான கருத்துகளை வெளியிட்டு மக்களுக்குப் பயனுள்ள தகவல்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பான நடிகை என்று ரசிகர்களில் சிலர் பாராட்டுகின்றனர்.
மீண்டும் தமிழில் நடிக்க விரும்பும் இவருக்கு, இரண்டு தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்துள்ளன.
அப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் தமிழில் தாம் எதிர்பார்க்கும் தொடர் வாய்ப்புகள் அமையும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் மாளவிகா சர்மா.


