‘அறம் செய்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள புதுப்படத்தை பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கியுள்ளார்.
இதில் ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது முழுநீள அரசியல் படம் என்கிறார் இயக்குநர். “அரசியல் படம் என்று நாங்களே முத்திரை குத்திக்கொண்டாலும் படத்தில் நேரடியாக அரசியல் குறித்துப் பேசவில்லை. ஏனெனில் இதில் நடித்துள்ள அனைவருக்குமே வேறு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
“நாயகன் ஜீவா நீட் தேர்வு குறித்துப் பேசியுள்ளார். கதாநாயகி அஞ்சனா அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் தன்மை குறித்துப் பேசுவார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளனர்.
“நமக்கு ஆட்சி மாற்றம் தேவையில்லை. முழுமையான அரசியல் மாற்றம்தான் தேவை. அதைப் பற்றி அலசியுள்ளோம்,” என்று விளக்கம் அளிக்கிறார் இயக்குநர் பாலு.
இப்படத்தில் அரசியல்வாதிகள், தனி நபர்கள், அரசியல் கட்சியை தாக்கிப் பேசும் எந்தவொரு காட்சியும் இடம்பெறவில்லை என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர்.
கடந்த 74 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களைப் பற்றி பேசி உள்ளதாகச் சொல்கிறார்.
“அதனால்தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி, மக்களாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளோம்,” என்கிறார் இயக்குநர் பாலு.

