அண்மையில், சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மருத்துவக் குறிப்பு ஒன்றைக் கூறியிருந்தார். அதில், ஹைட்ரஜன் பெராக்ஸைடை பயன்படுத்தி சுவாசித்தால் சில பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் தேவையின்றி மருந்து மாத்திரைகளை எடுக்கவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, “சமந்தா கூறியபடி யாரும் செய்யவேண்டாம், ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் சுவாசிப்பது ஆபத்தானது. தவறான குறிப்புகளை வெளியிடும் சமந்தாவை சிறையில் அடைக்கவேண்டும்,” என சமந்தாவை சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்ற மருத்துவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தான் அப்படி கூறியதற்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ள மருத்துவர், மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில், “மருத்துவம் பற்றிய அறிவில்லாதவர் எனக் குறிப்பிட்டு சமந்தாவைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல; சமந்தா எந்த தவறான உள்நோக்கத்துடனும் இதைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்.
“ஆனால், சமந்தா போன்றவர்களைக் கோடிக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருவதால் ஆபத்துள்ளது என்பதால் அதைத் தடுக்கவே நான் அப்படிக் கடுமையாகக் கூறினேன். அதற்காக சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஆனாலும், சமந்தா செய்தது தவறுதான். இனிமேலும் அந்தத் தவறை அவர் செய்யாமல் இருக்கவேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

