நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை மீனாட்சி.
ஜகவீர் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்துக்கு ‘2கே லவ் ஸ்டோரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் முன்பு இயக்கிய ‘கென்னடி கிளப்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மீனாட்சி. அதன் பிறகு உருவான ‘வீரபாண்டியபுரம்’ படத்திலும் இவர்தான் நாயகி.
இப்போது மீண்டும் சுசீந்திரன் படத்தில் இணைந்திருப்பது உற்சாகம் அளிப்பதாகத் சொல்கிறார் மீனாட்சி. இதே உற்சாகத்தை படக்குழுவினரிடமும் காண முடிகிறது.
“உண்மையாகவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையர்களை மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். ‘2கே’ தலைமுறையினரின் காதல், நட்பு உள்ளிட்ட அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப்படம் உருவாகிறது.
“இளைஞர் ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதை, திரைக்கதையை அமைத்துள்ளோம்.
“கோயம்புத்தூரிலும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது,” என்கிறார் சுசீந்திரன்.
இப்படத்தில் பால சரவணன், பாக்கியராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் உள்ளனர். மீனாட்சியைப் பொறுத்தவரை சுசீந்திரன் எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் கால்ஷீட்டை ஒதுக்கி உள்ளாராம்.
தொடர்புடைய செய்திகள்
“திருமண விழாக்களை புகைப்படம் எடுக்கும் இளைஞனின் வாழ்க்கையையும் இதில் பதிவு செய்துள்ளோம். இது மிகவும் சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“புதுமுக நாயகன், மீனாட்சி என்று அனைவரும் தங்களுடைய பங்களிப்பைக் குறைவின்றித் தந்துள்ளனர்,” என்கிறார் சுசீந்திரன்.
கார்த்திக் நேதா இயற்றியுள்ள பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் டி.இமான்.
சுசீந்திரனின் பத்து படங்களுக்கு இசையமைத்தவர் என்ற வகையில், அவருக்குத் தேவைப்படும் வகையில் பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளாராம் டி.இமான். ஜூலை 10ஆம் தேதி பூசை போடப்பட்ட கையோடு, இப்படத்தின் பணிகள் வேகம் எடுத்துள்ளன.