1970ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப்பறந்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. அந்தக் காலகட்டத்தில் ஆண்டுக்கு இவர் நடிப்பில் 10 படங்களாவது வெளியாகிவிடும். தமிழ் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் நடிக்க இயக்குனர்களின் முதல் விருப்பமாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.ஆர்.விஜயா, அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
சொந்தமாக தனி விமானம் வைத்திருந்த முதல் தமிழ் நடிகையும் இவர்தான். தற்போது அவருக்கு 75 வயதாகிறது. இந்த வயதிலும் நடிப்பின்மீது தாகம் தணியாமல் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நாடகம் ஒன்றில் நடித்திருந்தார். இதுவே, அவர் தன் கலையின்மீது இன்னும் ஆர்வம் குறையாமல் இருப்பதற்குச் சான்றாகும்.