பொதுவாக சிரிப்பு என்றால் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். தமிழ்த் திரையுலக ரசிகர்களிடம் அந்த அளவுக்கு பிரபலமானவராக விளங்குகிறார் வடிவேலு.
பெரும்பாலும் நடிகர்கள் பலரும் வாய்ப்பைத் தேடி சென்னைக்கு வந்து, பெரும்பாடு பட்டுத்தான் அந்த வாய்ப்பை பெறுவார்கள். ஆனால், இந்த சிரமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் வடிவேலு. ஏனெனில், வாய்ப்பு கிடைத்தபிறகுதான் அவர் சென்னைக்கு வந்தார். வந்தவுடன் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் வடிவேலு.
அதேசமயத்தில் வடிவேலு குறித்த சர்ச்சைகளும் அதிகம் இருந்து வருகிறது. வடிவேலுவுடன் பணிபுரிந்த பல சின்ன நடிகர்களும் கூட இந்த விஷயங்களை பேட்டிகளில் கூறி இருக்கின்றனர்.
தன்னைத் தாண்டி நகைச்சுவை செய்யும் யாரையும் வடிவேலு தன்னுடன் வைத்துக் கொள்ளமாட்டார், மற்றவர்களை வளரவிடமாட்டார் என்று அவர்கள் பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில், வடிவேலுவுடன் ஜோடியாக நடித்த நகைச்சுவை நடிகை பிரியங்கா, ஒரு பேட்டியில் வடிவேலுவுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார்.
“வடிவேலுவுடன் நடிக்கும்பொழுது நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்கத் தெரியவேண்டும். ஏனெனில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்தால் நமக்கு படப்பிடிப்பு இடத்திலேயே சிரிப்பு வந்துவிடும்.
“இதுபோல் சிரித்ததால் பலர் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர். அதனால் அவர் எவ்வளவு நகைச்சுவை செய்தாலும் சிரிக்காமல் நடிப்பதற்கு முடிந்தால் மட்டுமே வடிவேலுவுடன் தொடர்ந்து சேர்ந்து நடிக்கமுடியும்,” என்கிறார் பிரியங்கா.
தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டத்தில் ஏற்கெனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் இருவரையும் தாண்டி ஒரு புது நகைச்சுவை நடிகர் வரமுடியாது எனும் நிலை இருந்தது. ஆனால், அவர்களுடன் சேர்ந்து நடித்தபோதும்கூட தன்னுடைய தனிப்பட்ட நகைச்சுவையை வடிவேலு வெளிப்படுத்தினார். இதனால் அவரை கவுண்டமணி அடித்ததாகவும் கூட கூறப்படுவது உண்டு.
இதுபோல் வளர்ச்சியடைந்து வந்த வடிவேலுவிற்கு தொடர்ந்து தனது திரைப்படங்களில் முக்கிய வாய்ப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் வி.சேகர்.
அதனைத் தொடர்ந்துதான் வடிவேலுவின் சம்பளமும் அதிகரித்தது. முதன்முதலாக வடிவேலு கார் வாங்கியதும் வி.சேகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக வடிவேலுவும் இருந்து வருகிறார்.

