நடிகர் ஷாருக்கான் கோல்கத்தா ‘நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளரும் பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். இவரது நடிப்பில் 2002ல் வெளியான ‘தேவதாஸ்’ படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.
இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலித்தது மட்டுமல்லாமல் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அவர் நடித்த படங்களின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.
விருது பெற்ற பின்னர், மேடையில் நடிகர் ஷாருக்கான் பேசினார்.
லோகார்னோவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய அவர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களின் கூட்டத்தை பார்த்து, கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்றார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெற்ற விழாவில் ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் அங்கமும் நடைபெறுகிறது.

