ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது மருமகனும் நடிகருமான உமாபதி தம்பி ராமையாவுக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஒரு படத்தை தானே தயாரித்து இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உமாபதியைக் கதாநாயகனாக வைத்து தான் நடித்த ‘ஏழுமலை’ எனும் படத்தின் 2ஆம் பாகமாக இந்தப் படத்தை அவர் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் உமாபதி ராமையா நாயகனாக நடிக்க உள்ள நிலையில், அவரது மனைவியும் அர்ஜூனின் மகளுமான ஐஸ்வர்யா அவருக்கு நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கில் வெளியான நரசிம்ம நாயுடு என்ற படத்தை ரீமேக் செய்து தமிழில் ஏழுமலை என்ற பெயரில் இயக்கி நடித்தார் அர்ஜூன். அண்ணன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு தம்பி அண்ணன்கள் தன்னை மதிக்கவில்லை என்றாலும் தனது பாசத்திற்காக மனைவியையே பிரியும் அளவுக்கு செல்வது ஏழுமலை படத்தின் கதை. ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்த படத்தில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கின்றன.

