சிம்பு தனது 48வது படத்தில் கமலின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இவரின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து சிம்பு நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதால் இவர் தன்னுடைய சம்பளத்தை 40 கோடி ரூபாய்க்கு உயர்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
அதன் காரணமாக இவர் நடிக்கவிருந்த ‘கொரோனா குமார்’ படத்தைக் கைவிட்டார் தயாரிப்பாளர்.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதுப்படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. இப்படத்திற்காக சிம்பு தன் கொள்கையைத் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கமலின் தயாரிப்பு என்பதால் எந்த பேரமும் பேசாமல் தன் சம்பளத்தைக் குறைத்து இருக்கிறார் சிம்பு.
அத்துடன், இப்படம் தனக்கு மேலும் பெயர் பெற்றுத் தரும் என்று சிம்பு நம்புவதாகக் கூறப்படுகிறது.