தமிழில் அண்மைக் காலமாக வெளியாகும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களின் வசூல் வெற்றி ஏவிஎம் போன்ற பாரம்பரிய நிறுவனங்களுக்கும்கூட நம்பிக்கையூட்டி வருகிறது.
இதையடுத்து, சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பத்து கோடி ரூபாய் செலவுக்குள் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’, ‘சிறை’, ‘தாய் கிழவி’ போன்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம், அதன் தயாரிப்புத் தரப்புக்கு 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தந்ததாகக் கூறப்படுகிறது.
‘தாய் கிழவி’ படமும் கிட்டத்தட்ட அதேபோன்ற வசூலை அதன் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஈட்டித் தந்ததாகத் தெரிகிறது.
இந்த உற்சாகத்தில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. நிறுவனம் ‘தாய் கிழவி’ போன்று ஆண்டுக்கு மூன்று படங்களைக் குறைந்த செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாம். அதற்கான பணிகளும் சத்தமின்றித் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனமும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
அந்நிறுவனம் கதை கேட்கும் குழு ஒன்றை அமைத்து, பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

