‘கேங்கர்ஸ்’ திரைப்படம் குறித்து இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்துகொண்டார்.
‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணியில் இத்திரைப்படம் இருக்கும் என்றார் அவர்.
‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. பல ஆண்டுகள் கழித்து, இப்படத்தில் சுந்தர்.சி – வடிவேலு நகைச்சுவைக் கூட்டணி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.
இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுந்தர் சி. பேசினார்.
“நானும் வடிவேலு அண்ணனும் மீண்டும் இணைந்துள்ளோம். உங்களை மகிழ்விக்க கடுமையாக உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த ஏ.சி. சண்முகம், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படம் தொடங்க வித்திட்டது வடிவேலு அண்ணன்தான். ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் கதாபாத்திரங்களை எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் இப்படத்தின் கதை.
“இந்தப் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேலு அண்ணன் போகிறபோக்கில் ‘கேங்கர்ஸ்’ என்றார். அதையே தலைப்பாக வைத்துவிட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்” என்று சுந்தர். சி தெரிவித்தார்.

