தமிழ், தெலுங்கு திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பாலிவுட்டில் அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராகத் திகழ்பவர் நடிகை டாப்சி. இவர் தற்போது இந்தி திரையுலகில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
‘தப்பட்’ போன்ற வெற்றிப் படத்தைத் தந்த இயக்குநர் அனுபவ் சின்ஹாவுடன் டாப்சி மீண்டும் கைகோத்துள்ளார். இந்த முறை இவர்கள் இணைந்திருக்கும் படத்தின் பெயர் ‘அஸ்ஸி’.
முன்னதாக அனுபவ் சின்ஹா இயக்கிய ‘முல்க்’ படத்தில் டாப்சி வழக்கறிஞராக நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படத்தில் மீண்டும் அவர் வழக்கறிஞராகக் களமிறங்குகிறார்.
இப்படத்தில் டாப்சியுடன் இணைந்து, மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை கனி குஸ்ருதி, மூத்த நடிகை ரேவதி, மனோஜ் பஹ்வா மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான ‘அஸ்ஸி’ படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீதிக்கான போராட்டத்தில், எதற்கும் அஞ்சாமல் பின்வாங்க மறுக்கும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக டாப்சி இதில் மிரட்டியுள்ளார். அதேவேளையில், கதையின் உணர்ச்சிகரமான மையப்புள்ளியாக கனி குஸ்ருதி விளங்குகிறார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறுகையில், “இயக்குநர் அனுபவ் சின்ஹா இந்தப் படத்தை மிகுந்த நேர்மையுடன் அணுகியுள்ளார். டாப்சி தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல; சமூகத்தில் ஒரு முக்கிய உரையாடலைத் தொடங்கி வைக்கும் படைப்பு,” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

