தமிழக அரசு அண்மையில் மாநிலத் திரைப்பட விருதுகளை அறிவித்தது.
ஏழு ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளனர். தகுதியான பலருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன.
அந்த வகையில், ‘கனா’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரமான மோனிகா விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள் அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளனரா என்று தம் மனத்தில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘கைதி’, ‘ராட்சசன்’, ‘சங்கு சக்கரம்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மோனிகா. அப்படியிருந்தும் தமிழக அரசு தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்பதே இவரது ஆதங்கம்.
ஐந்து வயதிலிருந்தே தாம் திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கடந்த 2016 முதல் 2022 வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தம்மால் இயன்ற முயற்சி, உழைப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மோனிகா, அக்கதாபாத்திரங்களில் பல, நினைவில் இருக்கக்கூடியவையாக அமைந்தன என்று கூறியுள்ளார்.
தமக்கு விருது கிடைக்கவில்லை என்பதால் இத்தகைய விமர்சனத்தை தாம் முன்வைக்கவில்லை என்றும் தம்மைப் போலவே அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்ற யாருக்காவது விருது அறிவிக்கப்பட்டிருந்தால் தாம் இவ்வாறு விமர்சிக்க வாய்ப்பில்லை என்றும் மோனிகா விளக்கம் அளித்துள்ளார்.

