அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிமான்டி காலனி 3’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ. 50 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, 2024ஆம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.
அதைத் தொடர்ந்து, தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் அவரே இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த ‘டிமான்டி காலனி-3’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும் ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனமும் இணைந்து 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாகவே, இவ்வளவு பெரிய தொகைக்கு இப்படத்தின் உரிமம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

