ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய நடிகைகள் குஷ்பு, ஹன்சிகாவிற்கு மட்டுமன்றி சமந்தாவிற்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
‘நான் ஈ’ படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் சமந்தா. அதன்பிறகு, ‘நீதான் என் பொன்வசந்தம்’, ‘அஞ்சான்’, ‘மெர்சல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாதபோதிலும் இணையத் தொடர்களில் நடித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வரும் சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார்.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டம், ஆல்பாடு பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சந்தீப். சமந்தாவின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டின் வளாகத்தில் சமந்தாவின் மார்பளவு சிலையை நிறுவி, திறப்பு விழாவையும் மிகப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
‘மயோசிடிஸ்’ நோயில் இருந்து சமந்தா குணமடைய வேண்டி திருப்பதி உள்ளிட்ட ஆலயங்களிலும் அவர் பிரார்த்தனை செய்ததாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சமந்தா ஒரு நடிகையாக மட்டுமின்றி சிறந்த மனிதநேயம் கொண்டவராகவும் இருப்பதால் அவருக்காக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து கோயிலைக் கட்டி அவரது சிலையை வைத்துள்ளதாக சந்தீப் கூறியுள்ளார்.
சமந்தாவிற்கு முன்னதாக நடிகை குஷ்புவிற்கு தமிழகத்தின் திருச்சியில் கோயில் கட்டப் பட்டுள்ளது. அதேபோன்று நடிகை ஹன்சிகாவிற்கும் ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கின்றனர்.
ஆனால், நயன்தாரா மட்டும் தனக்கு கோயில் கட்டக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து அவருக்கு யாரும் கோயில் கட்டவில்லையாம். மேலும், கடவுளைவிடவும் தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.