திரைத்துறையில் ஆண், பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது, திரையுலகில் ஆண், பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் ஊதியப் பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
“ஊதிய பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இது மாறவேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. திரைத்துறை இப்போது பெருமளவில் நிறுவனமயமாகி விட்டது. ஆண், பெண் நடிகர்களின் ஊதியத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது.
“எனக்குத் தென்னிந்தியத் திரைத்துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனெனில் அங்குதான் நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை.
“பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒருவித வசதி தென்னிந்தியத் திரையுலகில் கிடைக்கிறது. ஒழுக்கத்துடன் செயல்படுவது, நேரத்தைச் சரியாகக் கடைப்பிடித்தல் ஆகியவற்றுடன் பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

