தூக்கம், உடற்பயிற்சி, சத்தான உணவு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
இந்தியில் ஷாருக்கானின் ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன். அதையடுத்து அட்லி, அல்லு அர்ஜுன் படங்களிலும் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் திரையுலகில் 8 மணிநேரம் வேலை என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்ன ஒரு கருத்து விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா, தான் இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திற்கு தீபிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியபோது 8 மணி நேரம்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபடக் கூறியதால் அவரை அப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதைக் கைவிட்டார்.
தீபிகா படுகோன் சொன்ன இந்த 8 மணி நேர வேலை என்பதற்கு ராஷ்மிகா மந்தனாவும் அண்மையில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரை உலகில் எட்டு மணி நேரம் வேலை என்பதை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியதோடு, வாழ்க்கையில் மூன்று அத்தியாவசியங்களை அனைவரும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
தூக்கம், உடற்பயிற்சி, சத்தான உணவு. இவை சரியானபடி கிடைத்தால்தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால் அனைவரும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

