திரைப்பயணத்தில் மறக்க முடியாத படைப்பு: ஸ்ரீலீலா

2 mins read
b14e909e-a445-4b94-b22a-52a8f5ae278d
ஸ்ரீலீலா - படம்: xyz social

‘பராசக்தி’ தமது திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் என்று நடிகை ஸ்ரீலீலா கூறியுள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், படத்தின் நாயகி ஸ்ரீலீலா, நடிகர் அதர்வா, ரவி மோகன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ படம் தமக்கு ஆழமான, முக்கியமான கதாபாத்திரத்தைத் தந்ததோடு நிற்காமல், அழகான நினைவுகளைப் பரிசளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

படப்பிடிப்பின்போது அனைவரும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியதாகவும் தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

“சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு விடாமுயற்சி மட்டும் காரணமல்ல, அவரது நல்ல எண்ணங்களும் இந்த வெற்றிக்கான காரணங்களில் அடங்கும்.

“அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்வார். இந்த குணம்தான் அவரைக் கோடிக்கணக்கானவருக்குப் பிடித்தமானவராக மாற்றியுள்ளது.

“நான் இதுவரை நடனமாடிய பல பாடல்களில் ஜிவி பிரகாஷ்குமாரின் ஆர்யமாலாவுக்கு என் மனத்தில் எப்போதும் சிறப்பு இடம் உள்ளது,” என்றார் ஸ்ரீலீலா.

நடிகர் ரவி மோகன் பேசுகையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நன்றாக நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.

“ரசிகர்களும் பாராட்டிவிட்டால் நிம்மதியாக இருப்பேன். இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கியுள்ளோம். கரியிலும் சாலையிலும் படுத்துக்கிடந்தோம். ஓடும் ரயிலில் சண்டை போட்டோம். இலங்கையில் படப்பிடிப்பை நடத்தினோம்.

“தன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார் ரவி.கே.சந்திரன். என்னை ‘ரொமான்டிக்’ நாயகன் என்பார்கள். எனக்குப் பிறகு இந்தப் பட்டப்பெயர் அதர்வாவுக்குப் போகும்,” என்றார் ரவி மோகன்.

குறிப்புச் சொற்கள்