இந்தியத் தொலைக்காட்சிப் புகழ் உர்ஃபி ஜாவேத், திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால், மும்பையில் வீட்டை வாடகைக்கு எடுக்க இவர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்.
ஒற்றையர், முஸ்லிம், நடிகையாக இருப்பதால் வாடகைக்கு வீடு கிடைப்பது சவாலாக இருப்பதாக அண்மையில் டுவிட்டரில் இவர் பதிவிட்டார்.
"நான் உடை அணியும் விதம் காரணமாக முஸ்லிம் உரிமையாளர்கள் எனக்கு வீட்டை வாடகைக்குவிட விரும்புவதில்லை. நான் ஒரு முஸ்லிம் என்பதால் இந்து உரிமையாளர்கள் எனக்கு வீட்டை வாடகைக்குவிட விரும்புவதில்லை.
"எனக்கு அரசியல் அச்சுறுத்தல் நிலவுவதாலும் எனக்கு வீட்டை வாடகைக்குவிட சில உரிமையாளர்கள் தயங்குகின்றனர். இதனால் மும்பையில் வாடகை குடியிருப்பைக் கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் சவாலாக உள்ளது," என்று உர்ஃபி பதிவிட்டார்.
அவரது இந்தப் பதிவுக்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ளனர். வாடகைக்கு வீடு கிடைக்க வேண்டுமென்றால் ஒழுங்காக உடை அணியுமாறு சிலர் கூறியுள்ளனர்.
வாடகைக்கு வீடு கிடைப்பது சிரமம் என்றால், மும்பையில் வீடு வாங்குமாறு ஒருவர் கூறினார். வசிப்பதற்கு விரைவில் வீடு கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக வேறொருவர் குறிப்பிட்டார்.
அரைகுறை ஆடையால் சமூக ஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார் உர்ஃபி.

