கோல்டன் சுரேஷ், விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.
இதில் ஹரிகிருஷ்ணன் நாயகனாகவும் ஷீலா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஜெயராம், ஜானகி, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார்.
“பெண் என்றாலே ஏதாவது குறைசொல்லும் சமூகத்தில், அதையெல்லாம் கடந்து ஒரு தந்தை தன் மகளுக்கு எவ்வாறு ஆதரவாக இருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு,” என்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.
“எப்போதும் காவல்துறையோ அரசாங்கமோ தனிப்பட்ட மனிதரோ, ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளித்துவிட முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஒரு பெண் எவ்வாறு துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்தப் படம் விவரிக்கும். பெண்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைச் சொல்லி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.
ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூகப் பொறுப்புடன் கூடிய சிறந்த படைப்பாக ‘வேம்பு’ உருவாகியுள்ளதாகக் குறிப்பிடும் அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்கிறார்.
“சிறந்த கதையம்சம் கொண்ட யதார்த்தமான காட்சி அமைப்புகள் உள்ள திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து வெற்றிபெறச் செய்து வருகிறார்கள். அத்தகைய தரமான படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம்பெறும்.
“காரணம், இப்படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவருமே தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே திரையில் வாழ்ந்து காட்டியுள்ளனர். இதுபோன்ற அருமையான நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுதான் நல்ல பரிசாக அமையும்,” என்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.