புதுக்கோட்டை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ படம் 19ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது.
இந்நிலையில், வெங்கடேஷ்-மஞ்சுளா என்ற காதலர்கள், ‘லியோ’ படம் வெளியான திரையரங்கில் மோதிரம் அணிவித்து, திருமணம் செய்துகொண்டனர்.
விஜய்யின் தீவிர ரசிகர்களான இருவர்க்கும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முறைப்படி திருமணம் நடக்கவுள்ளது.
விஜய் தலைமையில் தன் திருமணம் நடைபெற வேண்டும் என்பது புதுக்கோட்டை மாவட்டம், மாப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷின் விருப்பம்.
இந்நிலையில், லியோ படம் வெளியாகும் நேரத்தில், அப்படத்திற்கு முன்பாக தன் திருமணம் நடக்க வேண்டும் என்று மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பர்வேசிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அப்படம் வெளியான திரையரங்கில், படத்தில் விஜய் தோன்றிய வேளையில், பர்வேஸ் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி, மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், “விஜய் நடத்தும் அறக்கட்டளையின் மூலமாக நான் படித்துள்ளேன். எனக்கு அம்மா அப்பா எல்லாம் அவர்தான். எனவே, அவர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்,” என்றார்.