’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகிய பிறகு அந்நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் யோசனையில் மூழ்கியிருக்க, விஜய் சேதுபதியை அழைத்துவந்து களைகட்ட வைத்துள்ளனர்.
இம்முறை புதிய நிகழ்ச்சித் தொகுப்பாளர், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட குழுவினர் எனப் பல்வேறு மாற்றங்கள், எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ளது ‘பிக்பாஸ் 8’ சீசன்.
விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை வழிநடத்துவார், கமல்ஹாசனுக்கு ஈடுகொடுக்க முடியுமா, போட்டியாளர்களை எவ்வாறு அணுகுவார், கண்டிப்பார் என்று சமூக ஊடகங்களில் விவாதங்கள் தூள்பறந்தன. இந்நிலையில், முதல் வாரமே தனது அதிரடியான அணுகுமுறையால் அசர வைத்துள்ளார் விஜய் சேதுபதி. போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே நேரடியாகக் கேட்டுவிடும் அவரது நேர்மையும் துணிச்சலும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மேலும், போட்டியாளர்களைப் பற்றிய தனது கருத்துகளையும் நேர்மையான முறையில் ரசிகர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார். வாரம் முழுவதும் ‘பிக்பாஸ்’ வீட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பான முக்கிய தருணங்களை விவாதித்து தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை.
“வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணியை விரிவாக அலசி, உரிய தீர்வுகளையும் கூறியுள்ளார். பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதை அனைவருமே ரசித்தோம்,” என்கிறார்கள் பெரும்பாலான பார்வையாளர்கள். அடுத்தடுத்த வாரங்களில் ‘பிக்பாஸ்’ வீடு மேலும் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

