கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கி மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள இயக்குநர் பொன் ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சண்முக பாண்டியன். இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இது, அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் தேமுதிக தலைவரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்துக்கான பூஜையை நடத்தினார்.
விஜயகாந்தின் ஆசிகளோடு இப்படத்தைத் தொடங்கப்போவதாக பொன்ராம் அறிவித்தார்.
மேலும், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் நடிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்துக்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

