தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, விலங்குகள்மீது, குறிப்பாக நாய்கள் மீது அதீத அன்பு கொண்டவர்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது அவரது வழக்கம்.
இந்நிலையில், திரிஷா தனது மகளைப் போல ஆசையாக வளர்த்து வந்த ‘ஸோரோ’ என்ற நாய், கடந்த 2024ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று உயிரிழந்தது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான த்ரிஷா, தனது சோகத்தை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பெரும் இழப்பிற்குப் பிறகு, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ‘இஸ்ஸி’ (Izzy) என்ற புதிய குட்டி நாய் திரிஷாவின் குடும்பத்திற்குள் நுழைந்தது.
அந்த நாய்க்குட்டியுடன் நடிகர் விஜய் விளையாடும் புகைப்படங்கள் அண்மையில் இன்ஸ்டகிராமில் வெளியாகிப் பரவின.
விஷ்ணு விஷால் பகிர்ந்த சுவையான தகவல்
தற்போது இந்த ‘இஸ்ஸி’ நாய்க்குட்டி எங்கிருந்து வந்தது என்ற சுவாரசியமான தகவலை நடிகர் விஷ்ணு விஷால் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
திரிஷா தற்போது வளர்த்து வரும் ‘இஸ்ஸி’ நாய்க்குட்டி, தன்னுடைய ‘பூடில்’ (Poodle) வகை டெடி நாயின் குட்டிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மனைவியும் நடிகை திரிஷாவும் மிக நெருங்கிய தோழிகள் என்றும் அவர்கள் இருவரும் சந்திக்கும் போதெல்லாம் வளர்ப்பு நாய்களைப் பற்றித்தான் அதிக நேரம் பேசிக்கொள்வார்கள் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

