‘96’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் பிரேம்குமார்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், பள்ளிப்பருவக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இதில் விஜய் சேதுபதியும் திரிஷாவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார் பிரேம்குமார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம், ‘96’ இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, அப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
“முதல் பாகத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் கதையைக் கேட்ட இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. எனவே மீண்டும் நடிக்க உள்ளனர்.
“விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்,” என்றார் பிரேம்குமார்.