‘தங்கலான்’ படத்துக்காக தாம் அதிகம் மெனக்கெட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
அந்தப் படத்தில் நடித்தது சுவாரசியமாகவும் அதேசமயம் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ படம் விமர்சன, வசூல்ரீதியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் ‘ரோட்டர்டாம்’ அனைத்துலகத் திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாளவிகா, தம்மைத் தேடிவந்த நல்ல வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
“ரசிகர்கள் எப்போதும் என்னைப் பார்க்கும் விதத்தில் இருந்து மாற்றிப்பார்க்க விரும்பினேன். எனக்கென இருந்த வழக்கமான பிம்பத்தை உடைக்கக் காத்திருந்த நேரத்தில்தான் ‘தங்கலான்’ வாய்ப்பு அமைந்தது.
“பார்த்தாலே அச்சுறுத்தும் கதாபாத்திரம் கிடைத்தது. இந்தப் படத்துக்காக நான் உயிரைக் கொடுத்து நடித்தேனா என்பதைவிட அதிகம் மெனக்கெட்டேன் என உறுதியாகச் சொல்ல முடியும்,” என்கிறார் மாளவிகா மோகனன்.