பிரபல எழுத்தாளர் தமிழ் பிரபா இயக்குநராக அறிமுகமாக உள்ளார். எனினும், இவர் தமிழ்த் திரையுலகத்துக்குப் புதியவர் அல்ல.
ஏற்கெனவே இயக்குநர் ரஞ்சித்திடம் எழுத்தாளராகப் பணியாற்றி உள்ளார்.
‘சார்பட்டா பரம்பரை’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘காந்தா’, ‘தங்கலான்’, ‘சொர்க்க வாசல்’ ஆகிய படங்களில் இவரது எழுத்துப்பணி குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக கதை, திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் பிரபா, இப்போது இயக்குநராக மாற உள்ளார்.
இவர் இயக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பே வெளியாக இருந்தது.
ஆனால், படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் திடீரென விலகிவிட்டதாம். இதனால் தமிழ் பிரபா வருத்தத்தில் மூழ்க ஹரிஷ் கல்யாண் மற்றொரு தயாரிப்பாளரைத் தயார் செய்துவிட்டாராம்.
“தன்னைத் தேடி வந்த நல்ல கதையை இழந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்பட்டுள்ளார் ஹரிஷ். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. அந்த ஒரு காரணத்துக்காகவே இப்படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்,” என்று கூறியுள்ளார் தமிழ் பிரபா.

