இளையர்களின் பொது அறிவையும் தமிழ் ஆற்றலையும் சோதிக்கும் பன்முகத்தன்மையுடைய ஒரு போட்டிக்குச் சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு போன்ற பல தலைப்புகளை ஒட்டிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்த இந்த ‘அரிமா 2026’ போட்டி ஒரு தளமாக விளங்குகிறது.
உயர்நிலை மூன்று, நான்கு அல்லது ஐந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு பெரியவரும் கொண்ட மொத்தம் எட்டு குழுக்கள் இப்போட்டியில் மோதவுள்ளன.
“நான்காவது போட்டியாளராகக் கலந்துகொள்ள பெற்றோர், உடன் பிறந்தவர், தமிழ் மீது பற்றுள்ளவர்கள் பதிவு செய்துள்ளனர்.
“மாணவர்களுடன் இருக்கும் அவர்களுடைய உறவு வலுப்பெற இது நல்ல வாய்ப்பாக அமைவதோடு ஒருவருக்கொருவர் புதுபுதுத் தகவல்களைக் கற்றுக்கொள்ள ஒரு நல்ல தளமாகவும் அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் இவ்வாண்டு அரிமா போட்டிக்கான ஏற்பாட்டு குழு தலைவி, வர்ஷா.
‘மின்னல் முரளி’, ‘ஒழுங்கா சொல்லு மாப்பு வச்சுடாத ஆப்பு’ போன்ற சுவாரசியம் கலந்த வித்தியாசமான போட்டி அங்கங்கள் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போட்டி உட்லண்ட்ஸ் நூலகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் சனிக்கிழமை (ஜூலை 18) பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
விறுவிறுப்பான போட்டியை ஒரு பார்வையாளராகக் காண https://tinyurl.com/ Arima26AudReg எனும் இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.

