இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் வர்த்தகங்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை நினைவுகூர்ந்தது மார்ச் 11ஆம் தேதி சிஐஎம்பி வங்கியில் நடந்த கருத்தரங்கு.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபையும் (SSACCI), சிஐஎம்பி வங்கியும் முதன்முறையாக இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தன. சென்ற ஆண்டு இரு அமைப்புகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.
முக்கிய வரி மாற்றங்கள் குறித்து ‘பிடிஓ’ (BDO) வரி ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வோங் சூக் லிங் பகிர்ந்தார்.
நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்ட 50 விழுக்காட்டு வருமான வரித் தள்ளுபடி, லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கே சாதகமானது என சில வர்த்தகங்கள் கூறியுள்ளதாக திருவாட்டி வோங் கூறினார்.
“இது ஒரு பொதுவான திட்டமே, நிரந்தரமானதன்று. அரசாங்கம் மக்களின் கருத்துகளை ஏற்று, நஷ்டத்திலிருக்கும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 2024 முதல் $2,000 ரொக்கமும் வழங்கத் தொடங்கியுள்ளது. மற்ற திட்டங்களும் உள்ளன,” என அவர் கருத்துரைத்தார்.
இந்த $2,000 ரொக்கம், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கே என்பது இவ்வாண்டு புதிதாக அறிமுகமான நிபந்தனை என்பதையும் அவர் சுட்டினார்.
படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் தகுதிபெறும் குறைந்த வருமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் அரசாங்கப் பங்களிப்பு அதிகரிக்கவுள்ளதை விளக்கினார் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் படிப்படியான சம்பள உயர்வுக்கான முத்திரை நிர்வாகப் பிரிவுத் தலைவர் வில்லியம் லிம்.
அரசாங்கத்தின் முயற்சியான ஒரே இடத்தில் சம்பளப் பட்டியல் சேவை (One-Stop Payroll) குறித்தும் அவர் விவரித்தார்.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபைத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு, வர்த்தகங்கள் உள்ளூரில் வளரவும் வெளிநாட்டிற்கு விரிவடையவும் கிடைக்கக்கூடிய உதவிகளை விவரித்தார்.
தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபைத் துணைத் தலைவர் முனைவர் பா.இராமநாதன், ஊழியர்த் திறன் மேம்பாடு, வேலை மறுவடிவமைப்புத் திட்டங்கள், மூத்தோருக்கான வேலை ஆதரவு போன்றவற்றை விளக்கினார்.
