விநாயகர் சதுர்த்தியையொட்டி திங்கட்கிழமை (செப்டம்பர் 14) கேலாங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் 5,200 சங்குகளுடன் 14 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எட்டு அடி அகலம் கொண்ட சிலையின் கட்டமைப்பை கோயிலின் அலங்காரப் பூசாரி வாகீசன் சிவாச்சாரியார் வடிவமைத்துள்ளார்.
சிவனின் ஐந்து முகங்களையும் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவதாக நம்பப்படும் பிராணன் (மூச்சை விட்டு இழுப்பது), அபானன் (கழிவுப் பொருள்களை வெளியேற்றுவது), வியானன் (கடுமையான செயல்களை செய்ய உதவுவது), சமானன் (உணவு செரிக்க உதவுவது), உதானன் (உயிர் பிரியும்போது எடுக்கும் மூச்சு) ஆகிய ஐவகை மூச்சுகளையும் பறைசாற்றும் வண்ணம் 5,000க்கும் மேற்பட்ட சங்குகளுடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இயற்கைப் பேரிடர்கள், தொற்றுநோய்கள், பொருளியல் நிச்சயற்றதன்மை, போர்ச்சூழல் போன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் சிங்கப்பூரர்களின் நலன் மேம்படவும் பிரார்த்தனை செய்து சிலையைத் தயாரித்துள்ளோம்,” என்றார் அவர்.
ஒவ்வொரு சங்கும் நான்கு அங்குலம் நீளம் கொண்டது என்றும் சிலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்குகளின் மொத்த எடை 900 கிலோகிராம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சங்குகளின் மொத்த மதிப்பு ஏறக்குறைய $3,000.
சூடான பசையைக் கொண்டு சிலையின்மீது சங்குகள் ஒட்டப்பட்டுள்ளன. உறுதியான வெளித்தோற்றத்தையும் கொண்டதாக சிலை உருவெடுத்துள்ளது.
மனிதர்களிடையே அன்பு, கனிவு, பரிவு போன்ற பண்புநலன்கள் வளர வேண்டுமென்ற நோக்குடனும் சிலை வடிவமைக்கப்பட்டதாக திரு வாகீசன் கூறினார்.

