தமிழ் பேசும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ என்ற சமய நல்லிணக்க அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நல்லிணக்கச் சுற்றுலாவை நடத்தியது.
கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் பங்கேற்ற சுற்றுலா, தெலுக் ஆயர் வட்டாரத்தில் நடைபெற்றது. சீன ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்களிடம் சீனப் பாரம்பரிய சமயத்தின் கலாசாரக்கூறுகள் விளக்கப்பட்டன.
சிங்கப்பூரின் வரலாறு, கடந்தகால பூசல்கள் குறித்தும் ஊழியர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. வழிகாட்டி ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளை இளையர்கள் தமிழில் மொழிபெயர்த்தனர்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியின்போது கேக் வெட்டப்பட்டது.
சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் சிறப்பான பராமரிப்பு, மதிப்பு, உபசரிப்பு ஆகியவை தரப்படவேண்டும் என்ற தம் அமைப்பின் நம்பிக்கையை இந்நடவடிக்கை வெளிப்படுத்துவதாக ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் நிறுவனர் நஸ்ஹத் ஃபஹிமா தெரிவித்தார்.
“பிறரது வாழ்க்கையை மேம்படுத்த நாம் முற்படும்போது அவர்கள்வழி நம் சொந்த வாழ்க்கை வளமாவதைக் கண்கூடாகக் காண்கிறோம். வாழ்க்கையின் உண்மை அவர்கள் வழியாக நமக்குப் புலப்படுகையில் நமக்கு இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி நாமே அறிந்துகொள்ள முடிகிறது,” என்றார் திருவாட்டி நஸ்ஹத்.