புகழ்பெற்ற இந்திய ஓவியர் ஏ பி ஸ்ரீதரும் அவரது உறவினர் சோலையப்பன் இராமநாதனும் இணைந்து சிங்கப்பூரில் கம்போங் கிளாம், ஜாலான் கிளேடேயில் பழங்காலப் புகைப்படக் கருவிகள் அரும்பொருளகத்தை 2017ல் ஜூன் மாதம் நிறுவினர்.
இங்கு உலகின் ஆகப் பெரிய கேமரா, ஆகச் சிறிய கேமரா, உலகின் முதல் ‘போலராய்டு கேமரா’, முதல் முப்பரிமாண கேமரா, துப்பாக்கி கேமரா, ஊன்றுகோல் கேமரா, புறாக் கேமரா உள்பட 1,000க்கும் மேற்பட்ட புகைப்படக் கருவிகள் உள்ளன.
உலகின் முதல் புகைப்படப் பிரதியும் புகைப்படத் துறையின் வளர்ச்சியைக் காட்சிப்படுத்தும் அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு உள்ளன.
ஆர்வம் பிறந்த கதை
இருவரும் புகைப்படக் கருவிகளைச் சேகரித்துவந்தாலும் வெவ்வேறு காரணங்களால் இருவருக்கும் இதன்மீது மோகம் ஏற்பட்டது.
திரு இராமநாதனின் தந்தை சிறுவயதில் அவரிடம் கொடுத்த கேமரா, கேமராக்களைச் சேகரிப்பதில் அவரிடத்தில் நாட்டத்தை ஏற்படுத்தியது. உலோக வணிகத்தில் பணியாற்றும் இவர், வெளிநாடுகளுக்குச் சென்று ஏலங்களில் பல்வித அரிய கேமராக்களை வாங்கியுள்ளார்.
‘உன் எதிரியோடு தோழமைப் பாராட்டு’ என்பதற்கேற்ப, ஓவியர்கள் பலரின் வாழ்வாதாரத்தைப் பாதித்த புகைப்படக் கருவிகளைச் சேகரிக்க திரு ஸ்ரீதர் 1999ல் தொடங்கினார்.
அவர் சென்னை ‘விஜிபி ஸ்னோ கிங்டம்’மிலும் பழங்காலப் புகைப்படக் கருவிகளுக்கான அரும்பொருளகத்தை அமைத்தார். அதை முன்னுதாரணமாகக் கொண்டே சிங்கப்பூர் அரும்பொருளகம் அமைக்கப்பட்டுள்ளது.
திரு இராமநாதன, திரு ஸ்ரீதரிடம் கிட்டத்தட்ட 8,000 பழங்காலப் புகைப்படக் கருவிகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இந்த அரும்பொருகத்தைச் சுற்றுப்பயணிகளிடம் விளம்பரப்படுத்த உதவி வருகிறது. சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகத்தில் புகைப்படக் கருவிகள் பற்றி விரிவுரையாற்றும் வாய்ப்பையும் திரு இராமநாதன் பெற்றுள்ளார்.
“இன்று கைப்பேசியால் அனைவரது கைகளிலும் புகைப்படக் கருவி தவழ்கிறது. ஒரே பொத்தானை அழுத்தி உடனுக்குடன் புகைப்படங்கள் எடுக்கமுடியும். ஆனால், ஆரம்பகாலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவு மணி நேரம் செலவானது என்பது பலருக்கும் தெரியாது.
“வர்த்தக ரீதியாக இது தழைத்தோங்கும் துறையல்ல. ஆனால், அடுத்த தலைமுறையினருக்குப் பல அரிய தகவல்களை எடுத்துச் செல்லும் சமூக நோக்குடன் இதைத் தொடங்கினோம்,” என்றார் திரு இராமநாதன்.

