உழவர்களைப் போற்றி, கால்நடைகளுக்கு நன்றி கூறி கொண்டாடப்படும் அறுவடை நன்னாளாக பொங்கல் பண்டிகை காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவீன சிங்கப்பூரில் மண்வாசனையுடன் தைத்திருநாளைக் கொண்டாட முடியாமல் போனாலும் திருவாட்டி மரியா ஸ்டெல்லா வீட்டில் மண்மணம் கமழும் பொங்கல் பண்டிகை உணர்வு தென்படுகிறது.
ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த 70 வயதான அவர், இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்.
ஸ்டெல்லாவின் வீட்டில் தைத்திருநாளுக்கான முன்னேற்பாடுகள் சற்று தனித்துவம் வாய்ந்தவை. பொங்கல் பண்டிகைக்குச் சில நாள்களுக்கு முன் நம்மில் பலர் தேக்காவுக்கு விரைந்து திருநாளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது வழக்கம்.
ஸ்டெல்லாவோ தமது தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கப்படும் தாவரங்களை, அறுவடை செய்து அவற்றைத் தைத்திருநாளுக்குப் பயன்படுத்துகிறார். பொங்கல் என்றாலே கடந்த ஈராண்டுகளாக இதுதான் ஸ்டெல்லாவுக்கு வழக்கமாக உள்ளது.
வீவக வீடுகளில் குடியிருப்பவர்கள் தோட்டக்கலையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் சமூக மன்றங்கள் ஒவ்வொரு குடியிருப்பிலும் சமூகத் தோட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
பீஷானில் வசிக்கும் ஸ்டெல்லா, தமது வீட்டுக்கு அருகில் இருக்கும் இடத்தில் இத்தகைய தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கேள்விப்பட்டவுடன் அதற்கு உடனே பதிவு செய்தார்.
“எனக்குத் தாவரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என் வீட்டில் நான் பல செடிகளை வளர்க்கிறேன். அதனால் சமூகத் தோட்டத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டவுடன் நான் அந்த வாய்ப்பை பற்றிக்கொண்டேன்,” என்றார் ஸ்டெல்லா.
தொடர்புடைய செய்திகள்
தாம் வசிக்கும் புளோக் அருகில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தின் மொட்டைமாடியில் வாகனங்கள் அதிகம் நிறுத்தப்படாமல் இருந்ததால் சமூக மன்றம் அதை ஒரு தோட்டமாக மாற்றியமைக்க முடிவெடுத்ததாகக் கூறிய ஸ்டெல்லா, கடந்த நான்காண்டுகளாக இதில் முழு ஆர்வம் காட்டி வருகிறார்.
“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிலம்தான் வழங்கப்படும். தமிழர்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளைப் பெரும்பாலும் நான் என் நிலத்தில் வளர்க்கிறேன். இதனால், என்னால் செலவை மிச்சப்படுத்தவும் முடிகிறது,” என்று ஸ்டெல்லா தெரிவித்தார்.
1.5 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலமுள்ள அவரது நிலத்தில் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து, பாக்கு, அவரைக்காய், சிறு வெங்காயம், பசலைக்கீரை, அருகம்புல், பூசணி, சிறுகீரை எனப் பலவகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
பொங்கலுக்கு முதல் நாள் தோட்டத்துக்குச் சென்று பொங்கல் வைப்பதற்குத் தேவையானவற்றைப் பறித்து வருவார் ஸ்டெல்லா.
“பிறரைப் போல நான் கடைகளுக்குச் சென்று இவற்றை வாங்க வேண்டிய அவசியமில்லை. நான் பயிரிட்ட செடிகளை பொங்கல் செய்யப் பயன்படுத்துவதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது,” என ஸ்டெல்லா நெகிழ்ந்தபடி சொன்னார்.
திருமணத்திற்குப் பிறகு இந்து சமயக் கூறுகளைத் தமது மாமியாரிடமிருந்து கற்றுத்தேர்ந்ததை நினைவுகூர்ந்த ஸ்டெல்லா, தொடக்கத்தில் கடினமாக இருந்தபோதும் நாளடைவில் இந்து சமய சடங்குகளிலும் பண்டிகைகளிலும் முழு ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியதாக தெரிவித்தார்.
தோட்டக்கலையில் ஆர்வத்தையும் தாண்டி ஸ்டெல்லா அதில் ஈடுபடுவதால் தம்மால் ஆரோக்கியமாக இருக்க முடிவதாகவும் சொன்னார்.
“ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நான் தோட்டத்தில் செலவிடுவேன். குனிந்து, நிமிர்ந்து அறுவடை செய்து என் செடிகளைப் பராமரிப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது,” எனப் புன்முறுவலுடன் சொன்னார் ஸ்டெல்லா.
பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது தம்மில் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று என்ற ஸ்டெல்லா, இம்முறை தமது இரு பேத்திகளுடன் தைத்திருநாள் கொண்டாடுவதை மகிழ்ச்சியான தருணமாகக் கருதுகிறார்.
“முதலில் என் கணவர், மாமியாருடன் கொண்டாடினேன். பிறகு என் கணவர், என் பிள்ளைகளுடன் கொண்டாடினேன். இன்று என் இரு பேத்திகளுடன் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. என் பேத்திகளுக்குத் தோட்டக்கலையில் ஆர்வம் சற்று குறைவாக இருந்தாலும் என்னால் முடிந்தவரை நான் அவர்களை அதில் ஈடுபடுத்துவேன்,” என்றார் ஸ்டெல்லா.
வேறு சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கலாசாரத்தில் இடம்பெறும் பண்டிகைகள், வழிபாடுகள் ஆகியவற்றில் முகம் சுளிக்காமல் ஈடுபட்டு அந்த பழக்கவழக்கங்களைத் தழுவும் ஸ்டெல்லா ஒவ்வொரு முறையும் தைத்திருநாளை ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கிறார்.