ஆண்டுதோறும் சிறந்த அன்னையர்க்கு ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கிப் போற்றி வருகிறது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். இந்த ஆண்டு முதன்முறையாக சீன, மலாய், இந்திய அன்னையர்க்கு ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கி சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் போற்றும் ஒரு நிகழ்ச்சியைக் கழகம் நடத்தியது.
திருவாட்டி சாரதா சக்கரபாணி, திருவாட்டி ரஷிதா அப்துல் ரசிப், திருவாட்டி யூ யோக் லெங் ஆகியோரே அந்த அன்னையர் திலகங்கள். மூன்று அன்னைமார்களும் கடந்து வந்த பாதையையும் அவர்கள் செய்த தியாகங்களையும் நெகிழ்வுடன் அறிவித்தபின், சிறப்பு விருந்தினர் முனைவர் சித்ரா சங்கரன் விருதுகளை வழங்கினார்.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்னையரைப் போற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாணவர் ஜெயப்பிரகாஷ் ஜோசித், அன்னையின் பெருமை பேசும் ஒரு பாடலைப் பாடினார். செல்வி க்ஷீரஜா நடனம் மூலம் அன்னையின் பெருமையை விளக்கினார். செல்வி ஸ்ரீநிதி ரெங்கப்பிரசாத், அன்னையின் பெருமையை உணர்வுபூர்வமாகப் பேசினார்.
திரு யூசுப் ரஜித் ஆற்றிய வரவேற்புரையில், ஆண்டின் 365 நாள்களில் அன்னையர் தினமே மிகவும் போற்றப்படவேண்டிய நாள் என்றார்.
இதுபோன்ற நிகழ்வுகள்தான் இந்தியச் சமூகத்தின் உண்மையான சிறப்புகளைப் பேசும் நிகழ்வு என்று முனைவர் சித்ரா சங்கரன் குறிப்பிட்டார்.
அன்னையரைப் போற்றும் ஓர் இசை நிகழ்வை இசைமணி பரசு கல்யாண் படைத்தார். திரு யூசுப் ரஜித் எழுதிய ஒரு பாடலை இசையமைத்துப் பாடி அதைக் காணொளியாகப் படைத்தார். இறுதி நிகழ்வாக அன்னையர்கள் பற்றிய சிறப்பான பல தகவல்களை வழங்கி பார்வையாளர்களை நெகிழவைத்தார் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன். அன்னையர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.