நீ சூன் லிங்க் குழுத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நீ சூன் லிங்க் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடந்த விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர். நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டெரிக் கோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினருக்கு இந்திய நற்பணிக் குழுவின் துணைத் தலைவர் திரு சாந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். குடியிருப்பாளர்களுக்கு ரங்கோலி போட்டிகளும் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்பட்டு என்டியுசி பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு முதல் இந்திய நற்பணிக் குழுவினரால் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலை சுமார் எட்டரை மணிக்குத் தொடங்கிய விழா, மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவையான உணவும் வழங்கப்பட்டது.