தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பயணங்களும் பாடங்களும்’ நூல் வெளியீடு

2 mins read
aef4405e-c6b5-41ac-b681-c5f2ebe1ce3e
வாழ்க்கையில் வெற்றிபெற்ற இந்தியச் சமூகத்தின் 10 தலைவர்களின் பயணம் இந்த நூலில் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

வாழ்க்கையில் வெற்றிபெற்ற இந்தியச் சமூகத்தின் 10 தலைவர்களின் பயணம் இந்த நூலில் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தின் தலைமை நிர்வாகி தேவேந்திரன், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தொழிலதிபர் மனோகரன் சக்கரபாணி, கல்வியாளர் மனோகரன் சுப்பையா, திருவாட்டி புஷ்பலதா கதிரவேலு, சட்டத்துறை முன்னோடி ராஜாராம், ஓய்வுபெற்ற மனிதவள அதிகாரி சரோஜினி பத்மநாதன், சுகாதாரத்துறை முன்னோடி டாக்டர் உமாராஜன், ஊடகவியலாளர் விஸ்வா சதாசிவன், தொழில் ஆலோசகர் டாக்டர் ஜகபர் அலி ஆகிய 10 தலைவர்களின் வாழ்க்கையைச் சுருக்கமாகப் பேசுகிறது இந்த நூல்.

நூல் வெளியீடு மூலம் கிடைக்கும் நிதி, ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நன்கொடை வழங்கப்படும். ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நன்கொடை அளித்தவர்களில் திரு அப்துல் ஜலீல், திரு மனோகரன் சக்கரபாணி, திரு ராஜாராம் உள்ளிட்டோர் அடங்குவர்.

நாட்டின் சரித்திரம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் இருக்கிறது என்று திரு விஸ்வா சதாசிவன் கூறினார்.

பத்து தலைவர்களின் வாழ்க்கையைச் சொல்வதற்காக மட்டும் இந்த நூல் எழுதப்படவில்லை என்றும் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டபோது இந்த நாட்டையும் வளர்ச்சியடையச் செய்தார்கள் என்றும் வளர்ச்சியடைந்த நாடு அவர்களுக்கு மேலும் புகழ் சேர்த்தது என்றும் நூலாசிரியர் யூசுப் ராவுத்தர் ரஜித் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், ஒவ்வொருவரின் பயணமும் அடுத்த தலைமுறைக்கு பாடமே என்றும் இன்றைய தலைமுறை இதுபோன்ற நூல்களைப் படித்து தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

டாக்டர் ஃபைஷாலின் கையெழுத்துடன் கூடிய நூல்கள், முதலில் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. நன்கொடை அளித்தவர்கள் பாராட்டப்பட்ட பிறகு, மற்றவர்கள் நூல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
குறிப்புச் சொற்கள்
யூசுப் ராவுத்தர் ரஜித்நூல்நன்கொடை