கவிமாலை சிங்கப்பூர் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் 298வது சந்திப்பு மார்ச் 29ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடந்தது.
திரு பிரம்மகுமாரின் ‘கால மலரின் கவிதைத்தேன்’ நூல் அப்போது வெளியீடு கண்டது. முனைவர் ராஜீவ் ஸ்ரீநிவாசன் நூலாசிரியரையும் நூலையும் அறிமுகம் செய்தார்.
இந்தக் கவிதைத் தொகுப்பு நூல் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
திரு பிரம்மகுமார் ஒரு மூன்றாம் தலைமுறைச் சிங்கப்பூர்த் தமிழர். தமது ஏற்புரையில், இந்நூலை வெளியிடுவதற்கான காரணம் யார் என்பதையும் அதிலுள்ள சில கவிதைகளைப் பற்றியும் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்டார்.
இக்கவிதைத் தொகுப்பு எல்லோருக்கும் உகந்ததாக இருக்கும் என்றார் அவர். எல்லா வயதுப் பிரிவினருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் உரிய பலவகையான கவிதைகள் இதில் உள்ளன. மேலும், பேச்சுத் தமிழிலும் சில கவிதைகள் இருக்கின்றன. சில கவிதைகள் பாடல்களைப்போல அமைந்துள்ளன. ஏறக்குறைய எட்டுக் கவிதைகள் சிறுவர்களுக்காக இயற்றப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டின்போது 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்கப்பட்டன. அப்பர் டிக்சன் சாலையில் உள்ள ஆர்யா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் இந்நூலை வாங்கலாம்.